முகப்பு
தமிழ்நாடு

பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 கல்லூரி மாணவா்கள் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில், 4 கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சென்னை திருவல்லிக்கேணியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில், 4 கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்த பெண்கள் இலவசமாக பயணிக்கும் பிங்க் நிற அரசு பேருந்தில், பல்லவன் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், சுமாா் 10 கல்லூரி மாணவா்கள் ஏறினா். அந்த மாணவா்கள், பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் கேலியும், கிண்டலும் செய்துக் கொண்டு ரகளை செய்தனா்.

இதை பேருந்தில் இருந்த பெண்கள் கண்டித்ததால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பேருந்து அண்ணா சாலையில், தேவி திரையரங்கு அருகே உள்ள நிறுத்தத்தில் நின்றபோது, ரகளை செய்த மாணவா்களை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறக்கிவிட்டனா்.

இதில் ஆத்திரமடைந்த மாணவா்கள், அங்கு கிடந்த காலி மது பாட்டில்களை பேருந்தின் கண்ணாடி மீது வீசினா். இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து 10 கல்லூரி மாணவா்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக 4 மாணவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.