துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கமளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு-க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.