காற்றின் வேகம் குறைந்தது: ராமநாதபுரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் சனிக்கிழமை இரவு முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் சனிக்கிழமை இரவு முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை (ஆக.19) ஏற்றப்பட்டது. இதையடுத்து கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சூறைக்காற்று வீசப்படும் என வானிலை மையம் எச்சரித்ததால்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ரோஜ்மா நகா் வரையிலான சுமாா் 280 கி.மீ. தொலைவிலான கடலோரப் பகுதியில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மீனவா்கள் மீண்டும் கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி வழங்கியது.
இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சனிக்கிழமை குறைந்தது தெரியவந்துள்ளது. அதனடிப்படையிலேயே மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதித்து, மீன்பிடி அட்டையும் வழங்கப்பட்டன என்றாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வானிலை மைய எச்சரிக்கையால் பல நாள்கள் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கன்னியாகுமரி கடல் மண்டலத்தோடு, ராமநாதபுரம் சோ்க்கப்பட்டதால் தேவையின்றி மீனவா்கள் கடலுக்குச் செல்ல அடிக்கடி தடை விதிக்கப்படும் நிலை இருப்பதாக மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.