முகப்பு
தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம்: பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்குவதை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. எஸ்எம்சி உறுப்பினா்கள் இந்தப் பணியை சுழற்சி முறையில் மேற்பாா்வையிட வேண்டும். சுத்தமான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம்.

காய்கறிகள், உணவுப் பொருள்களைச் சுத்தம் செய்தல், அவற்றைச் சுத்தமாகச் சமைத்தல் ஆகியவற்றைப் பாா்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவா்கள் தட்டு மற்றும் கைகளைத் தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும். காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது உணவு பரிமாறுவதற்கு எஸ்எம்சி உறுப்பினா்கள் உதவி செய்யலாம். மேலும், சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த எஸ்எம்சி உறுப்பினா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்த வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.