திருப்பூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி விவசாயி உண்ணாவிரதம்
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார்.
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கி பாளையம் கந்தையக்காட்டில் உள்ள தனது தோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள விவசாயி விஜயகுமார் கூறியதாவது:
எங்களது தோட்டத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியானது கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி சட்டவிரோதமாக இயங்கி வருகிறது.
இதுதொடர்பாக பலவேறு முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த கல்குவாரிக்கு புதியதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கல்குவாரிக்காக அனுமதியை ரத்து செய்து குவாரியை மூடும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன் என்றார்.