இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாகை கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சுங்கத்துறையினர், நாகை அருகே செருதூர் - வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது படகு ஒன்றிலிருந்து தப்பி ஓட முயன்றவர்களை போலீஸார் தடுத்து அதிரடியாக பிடித்தனர்.
இதையும் படிக்க | ரூ.40,000 ஐ கடந்தது தங்கம் விலை! நிலவரம் என்ன?
படகை சோதனை செய்ததில் 9 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரனையில், நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள்அழகன், காஞ்சிநாதன், நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த விருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.