நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.
2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க.. டிச. 8ஆம் தேதி சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
1. தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2. ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.
3. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.