டிச. 23-இல் 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை ( டிச. 23) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை ( டிச. 23) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இம்மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளிடப்பட்ட அறிவிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (டிச.20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதன் கிழமை (டிச.21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.20 ,டிச.21) குமரிக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சில நேரங்களில் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.