சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நடிகர்கள் பலரும் நிதியளித்து உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்ம பள்ளி திட்டத்துக்காக, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் தருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. அஃப்தாப் பாணியில் கொலை: மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசியவரைக் காட்டிக்கொடுத்த நாய்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம பள்ளி’ என்னும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
மேலும், பள்ளி மற்றும் பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர்களுக்கு கல்வி கிடைக்கவும் பல்வேறு வகைகளில் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நம்ம பள்ளி திட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொருவரின் வாழ்விலும், வசந்தகாலம் என்றால் அது பள்ளிக்காலம்தான். எல்லாவற்றையும் அரசு மட்டுமே செய்ய முடியாது. மக்களும் உதவ வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவும் வகையில் நம்ம பள்ளி அறக்கட்டளை திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
தாங்கள் படித்த பள்ளிக்கு செய்யும் நன்றியாக முன்னாள் மாணவர்கள் உதவலாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவா் விஸ்வநாதன் ஆனந்த், ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேசன் தலைவா் வேணு சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.