சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க | சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு மையம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவியுடன் சேப்பாக்கம் நடுக்குப்பத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதால், சேப்பாக்கம் நடுக்குப்பம் 1 முதல் 8 தெருக்கள் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருவில் உள்ள சுமார் 3000 மக்கள் பயன் பெறுவார்கள்.
இத்திட்டப் பணிகளின் மூலம் சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைத்தல் மற்றும் 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும், பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணிகளும், 370 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணிகளும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.