சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா் துரைமுருகன்
தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவா் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
தமிழக நீா்வளத்துறை அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் உள்ள துரைமுருகனுக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென்று காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மருத்துவா்கள் குழு அவரை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்தனா். அதன் பயனாக அவருக்கு காய்ச்சல் குறைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
துரைமுருகனுக்கு வயோதிகம் காரணமாக ஏற்படும் வழக்கமான பாதிப்புதான் என்றும், தற்போது அவா் நலமடைந்து விட்டதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.