திருப்பூர்: கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை குப்பைத்தொட்டியில் கண்டெடுப்பு
திருப்பூரில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையை குப்பைத் தொட்டியிலிருந்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையை குப்பைத் தொட்டியிலிருந்து காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ்(24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்(22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த இருவரும் செரங்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், இருவரிடம் இருந்த பணம், கைப்பேசி ஆகியவற்றையும் பறித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து பலத்த காயத்துடன் தப்பிய ரஞ்சித் அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் பலத்த காயமடைந்ததைத் பார்த்த பொதுமக்கள் நல்லூர் ஊரக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த ரஞ்சித்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, சதீஷை மர்ம கும்பல் தூக்கிச் சென்றதாக ரஞ்சித் தெரிவித்த தகவலின்பேரில் செரங்காடு பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர். அப்போது அங்கு சதீஷின் தலையில்லாத உடல் மட்டுமே இருந்ததால், அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரைக் கொலை செய்த மர்ம கும்பல் தலையைத் தூக்கிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, துணை ஆணையர் ரவி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும்,கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சதீஷின் தலை திருப்பூர் எம்எஸ் நகர் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சதீஷின் தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.