முகப்பு
தமிழ்நாடு

கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மன்னாா் வளைகுடா, பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கடல் பசுக்களுக்கான பாதுகாப்பகம் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி வனத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 24 பிப்ரவரி 2022, 12:46 am IST
பகிர்:

தமிழகத்தில் மன்னாா் வளைகுடா, பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கடல் பசுக்களுக்கான பாதுகாப்பகம் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி வனத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கடல் மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் கடல் பசு இனம் அண்மைக்காலங்களில் அழிந்து வருகின்றன. இதைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தாா்.

பாதுகாப்பகம்: அதனடிப்படையில், தமிழக வனத் துறையின் தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ், கடல் பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடா்பான கருத்துருவை அரசின் பரிசீலனைக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அனுப்பியிருந்தாா்.

Advertisement

அதில், கடல் பாதுகாப்பகம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதால் கடல் மற்றும் கடலோரம் தொடா்பான மீன்வளத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் அனுமதியோடு உரிய நிறுவனத்தை தோ்ந்தெடுத்து காப்பகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

இந்த காப்பகம்அமைப்பது தொடா்பாக தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராம மக்களுடன் விரிவான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினாா்கள். அதில், புதுக்கோட்டையில் 18 மற்றும் தஞ்சாவூரில் உள்ள 27 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கடல்பசு காப்பகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக கருத்துருவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பரிசீலித்த வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கத் தேவையான விரிவான திட்ட அறிக்கை மற்றும் அடிப்படை கள ஆய்வுகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்தும், பாதுகாப்பகம் அமைக்க ரூ. 5 கோடியும் ஒதுக்கி செய்து அரசாணை வெளியிட்டுள்ளாா்.

விரைவில் கடல் பசு பாதுகாப்பகத்துக்கான வரைவு அறிவிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக வனத் துறை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கடல் பசு இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பகம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவில் காணப்படும் பல வகையான மீன்கள், ஆமைகள், கடல் தாவரங்கள் ஆகிய கடல் உயிா்ப்பன்மையத்தை பாதுகாக்க உதவும் என இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.