திமுகவின் கோட்டை என்பதை உறுதிப்படுத்திய திருவாரூர்; 11 பெண் வேட்பாளர்கள் வெற்றி
திருவாரூர் நகராட்சி திமுக கோட்டை எனச் சொல்லப்படுவதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
திருவாரூர் நகராட்சி திமுக கோட்டை எனச் சொல்லப்படுவதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. திருவாரூர் நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 23 வார்டுகளை திமுகவும், 1 வார்டை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் வென்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. இதனால், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் திமுகவுக்கே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
11 திமுக பெண் வேட்பாளர்கள்
திருவாரூர் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 11 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, 3 ஆவது வார்டில் ம.கஸ்தூரி, 9 ஆவது வார்டில் செ. புவனப்பிரியா, 11 ஆவது வார்டில் ச. அகிலா, 13 ஆவது வார்டில் சி. உமாமகேஸ்வரி, 17 ஆவது வார்டில் சி. சசிகலா, 18 ஆவது வார்டில் ரா. ஆசைமணி, 19 ஆவது வார்டில் ஜெ.விஜயலெட்சுமி, 20 ஆவது வார்டில் வே. கமலாம்பாள், 22 ஆவது வார்டில் ரெ. ரேவதி, 26 ஆவது வார்டில் க. பாரதி, 28 ஆவது வார்டில் தி. கோமதி என 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Advertisement
நகர்மன்றத் தலைவர் போட்டிக்கு 2 பேர் போட்டி
திருவாரூர் நகராட்சியில் 11 பேர் திமுக சார்பில் தேர்வு பெற்றிருந்தாலும் புவனப்பிரியா, அகிலா ஆகிய இரண்டு பேர் மட்டும் நகர்மன்றத் தலைவர் போட்டியில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 9 ஆவது வார்டில் வெற்றி பெற்ற செ. புவனப்பிரியா, 14 ஆவது வார்டில் வெற்றி பெற்ற செந்திலின் மனைவி ஆவார். செந்தில் ஏற்கனவே நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்தவர் என்பதால், புவனப்பிரியா நகர்மன்றத் தலைவருக்கான போட்டியில் இருக்கிறார்.
அதேபோல, 11 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ச. அகிலா, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளரான அமுதா சந்திரசேகரின் மனைவி ஆவார். மேலிடத்தின் ஆசி இவருக்கு உண்டு என்பதால், நகர்மன்றத் தேர்தல் போட்டியில் இவர் முன்னிலையில் உள்ளார் எனக் கூறலாம்.
எனினும், மேலிடத்தின் முடிவு இறுதியானது என்பதால் அனைவரும் மேலிட முடிவை எதிர் நோக்கியுள்ளனர்.