முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரை நகராட்சியை கைப்பற்றிய திமுக: துணைத் தலைவர் பதவி யாருக்கு?

தரம் உயர்த்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முதல் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வேட்பாளர் யார்

Updated On : 24 பிப்ரவரி, 2022 at 12:13 PM
பகிர்:

மானாமதுரை: தரம் உயர்த்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முதல் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது அக்கட்சியினரிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரூராட்சியாக இருந்து கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரையில் உருவாக்கப்பட்ட 27 வார்டுகளில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆதரவு சுயேச்சைகளும்  சில வார்டுகளில் வென்றுள்ளனர். நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி குறைந்த வாக்காளர்களைக் கொண்ட 27-ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். 

தேர்தலின்போது துணைத் தலைவர் பதவிக்கு பேசப்பட்ட திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி 15-ஆவது வார்டில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் தெய்வேந்திரனிடம் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் துணைத் தலைவர் பதவிக்கு 8-ஆவது  வார்டைச் சேர்ந்த பாலசுந்தரம் பேசப்பட்டார். தேர்தல் அறிவிக்கப்பின் திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி தேர்தல் களத்தில் இறங்கியதும் இவர்தான் நகராட்சியின் துணைத் தலைவர் பதவி வேட்பாளர் என திமுகவினர் கூறிவந்தனர். 

Advertisement

இந்நிலையில் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடத்தில் ஏற்பட்டுள்ளது.  

மானாமதுரை 8 ஆவது வார்டில் வென்றுள்ள திமுக வேட்பாளர் பாலசுந்தரம், மானாமதுரை நகர திமுக செயலாளர் பொன்னுச்சாமி

மேலும் மானாமதுரை நகராட்சி அந்தஸ்து பெறுவதற்கு முன்னர் மானாமதுரைக்கு பேரூராட்சி அந்தஸ்திலோ அல்லது நகராட்சி அந்தஸ்திலோ தேர்தல் நடந்தால் பாலசுந்தரம் தலைவராக நிறுத்தப்படுவார் என்றும் பேச்சு இருந்து வந்த நிலையில் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் தலைவர் பதவிக்கான இடம் (தனி) பொது என அறிவிககப்பட்டது.  

அதன்பின் துணைத் தலைவர் பதவி வேட்பாளருக்கு பாலசுந்தரம் முன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நகர செயலாளர் பொன்னுச்சாமி துணைத் தலைவர் பதவி  வேட்பாளருக்கு போட்டியிடக் கூடும் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது பொன்னுச்சாமி தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் பால சுந்தரம் துணைத்தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக திமுகவினர் நம்புகின்றனர். 

இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளரும் தமிழக அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் சுட்டிக்காட்டும் நபரே துணைத்தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சும் பலமாக உள்ளது. இவர் கைகாட்டும் நபர் பாலசுந்தரமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கட்சியினரிடத்தில் எதிர்பார்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.