யாருடைய துப்பாக்கித் தோட்டா என அறிய தடயவியல் சோதனை: ஆர்டிஓ அறிக்கை
புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறையினரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சித் தளத்தில் இருந்து வந்த தோட்டா யார் பயன்படுத்தியது என்பதை அறிய தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும் என இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்ச
புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறையினரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சித் தளத்தில் இருந்து வந்த தோட்டா யார் பயன்படுத்தியது என்பதை அறிய தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும் என இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலுள்ள மலையடிவாரக் குடிசை வீட்டில் கடந்த டிச. 30ஆம் தேதி காலை சிறுவன் புகழேந்தி தலையில் குண்டு பாய்ந்தது.
அப்போது பயிற்சித் தளத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும், மத்திய மண்டல காவல்துறையினரும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் இருந்தனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் எம்எஸ். தண்டாயுதபாணி விசாரணை நடத்திட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார்.
இதன்படி அந்த நேரத்தில் பயிற்சியில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய மண்டலக் காவல்துறையினரிடம் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்.
அப்போது இரு தரப்பினரும் தாங்கள் யாரும் குறிவைத்து யாரையும் சுடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவன் புகழேந்தியின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டா எந்தத் துப்பாக்கியின் தோட்டா என்றும் எந்தத் துப்பாக்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டா என்பது குறித்து தடயஅறிவியல் சோதனையில் தான் உறுதி செய்ய முடியும் என ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை காலை அறிக்கை அளித்துள்ளார் ஆர்டிஓ தண்டாயுதபாணி.