தமிழகத்தில் இன்று மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் இதுவரை 5.83 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1.39 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5,098 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,332 பேரும், திருவள்ளூரில் 591, கோவையில் 585 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இதையும் படிக்க- நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதி என தகவல்
இவ்வாறு அதிகரித்து வரும் கரோனா பரவலால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 40,260-ஆக உயா்ந்துள்ளது. மற்றொருபுறம் மேலும் 1,525 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,10,288-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,843-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஒமைக்ரான் தொற்றால் மேலும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.