மதுரை: மதுரையில் கரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்ததில் 3 வயது குழந்தை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அருகே கல்மேடு எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கணவர் இறந்த நிலையில் தன்னுடைய மகள் , மகன், மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மூத்த மகள் ஜோதிகாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிடும், வாழ்வாதாரம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் லட்சுமி(46) அவரது மகளான கரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா (23) மற்றும் அவரது சகோதரரான சிபிராஜ்(13), ஜோதிகாவின் மகனான ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதையும் படிக்க | வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா: இணைய முன்பதிவு நிறுத்தி வைப்பு
இதில் ஜோதிகா மற்றும் குழந்தை ரித்தீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையறிந்த அப்பகுதியினர் லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிலைமான் காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.