தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதி
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 4 லட்சம் பேர் தகுதிவாய்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. பிப்ரவரியில் தீவிரமடைந்து பிறகு குறையக்கூடும்: நிபுணர்
தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தை கரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்திட மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது மாநிலத்தில் இதுவரை மொத்தம் 8.83 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 17 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 3 கோடி 15 இலட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த 3.1.2022 அன்று 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் தொடங்கி வைத்து, அதில் 33,46,000 பயனாளிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், இதுவரை 21,52,755 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் சிறப்பு கவனம் அளித்து கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சுமார் 5,65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9,78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20,83,800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2,06,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட 1,01,069 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4,00,013 பேர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10.1.2022) சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.