முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் குமரனின் 90-வது நினைவு தினம் அனுசரிப்பு

கொடிகாத்த குமரனின் 90 ஆவது நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் நினைவகத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
திருப்பூர் குமரனின் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குமரன் நினைவகத்தில் மரியாதை செலுத்திய தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியினர்.
பகிர்:

திருப்பூர்: கொடிகாத்த குமரனின் 90 ஆவது நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் நினைவகத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த 1932 ஆம் ஆண்டு திருப்பூர் சட்டமறுப்புப் போராட்டம், தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆங்கிலேயே காவல்துறையினர் நடத்திய தடியடியில் கொடியைக் காத்து 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது நினைவகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் இன்னுயிர் நீத்த நாளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுதந்திப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், செயலாளர் அழகேந்திரன், பொருளாளர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் குமரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில்....

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் திருப்பூர் குமரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, மதிமுக சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பி.நேமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் மு.பூபதி, 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் சு.கெளரி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல, தமிழ்நாடு தியாகி குமரன் பொதுத் தொழிலாளர் சங்கம், சிவசேனை இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் திருப்பூர் குமரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.