மதுரையில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி பச்சைக்கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
முன்னதாக, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மதுரை ஆட்சியர் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
இன்று தொடங்கியிருக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். மகாலிங்க சுவாமி மடத்து காளை முதல் காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதனை வீரர்கள் யாரும் மடக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலமேடு மஞ்சமலை சாமியாற்றில் அமைந்துள்ள வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும், கார், இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படவுள்ளன.
முன்னதாக வீரர்கள் அனைவரும் ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதனையடுத்து முதலில் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.