தமிழகத்தில் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்குள்ளாகி 1 லட்சத்து 61,171 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 23,888 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அது உயரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே நிலை தொடா்ந்தால் அடுத்த சில நாள்களுக்குள் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிடும் என அஞ்சப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், கோவை மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் சென்னையில் 8,305 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 2,228 பேரும், செங்கல்பட்டில் 2,143 பேரும், திருவள்ளூரில் 854 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே மேலும் 15,036 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27லட்சத்து 89,045-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,038-ஆக அதிகரித்துள்ளது.