முகப்பு
தமிழ்நாடு

கடத்தூர் அருகே வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்

கடத்தூர் அருகே வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கடத்தூர் அருகே வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், போசிநாய்க்கனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரே நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு ஒசஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

ஒசஅள்ளி ஊராட்சியில் போசிநாயக்கனஹள்ளி, ஒசஅள்ளி, வேடியூர், பாசாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இதில், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் சொந்தமாக நிலம், வீட்டு மனைப் பட்டாக்கள் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அரசு உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

எனவே, நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா இல்லாதோருக்கு அரசு சார்பில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, போசிநாயக்கனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி தலைமையிலான அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாள் இடைவெளியில் வீட்டு மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் கிராம மக்கள் தங்களின் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.