கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக சிறுவனுக்கு முதல்வர் ஊக்கத்தொகை
சர்வதேச சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
சர்வதேச சதுரங்கப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டுகிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத் சுப்ரமணியம் அவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வரும் பரத் சுப்ரமணியன், 2013-ஆம் ஆண்டு முதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக விளையாடிய பரத் சுப்ரமணியம் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும், 2022- ஆம் ஆண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பரத் சுப்ரமணியத்திற்கு 2019-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 இலட்சம் ரூபாயும், 2022- ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 இலட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் அபூர்வா, பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் மற்றும் பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.