சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக ஆட்சி மன்றத் தலைவர்கள் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியை சந்தித்து ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் நியமனத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக திமுகவில் சேர்ந்தவர்களை பணியமர்த்திய அமர்த்தியுள்ளது சம்பந்தமாக விவரங்கள் கேட்டுப் பேசினர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி , ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உரிய மரியாதை தராமல் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுமார் 17 பேர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தர்னா போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.