நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்."