தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில்,  சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.

அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, கட்சி அலுவலகத்திற்குள் நுழைவதற்கு உரிமை இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினரும் காவல்துறையினரிடம் விளக்கமளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதிமுக இருப் பிரிவினருக்கும் இடையே மீண்டும் மோதல் நடைபெறும் சூழல் உள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கருத்தில் வன்முறையை தடுக்கும் நோக்கில் 146 சட்ட விதியின்படி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவெடுத்தனர்.

காவல்துறையின் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் ஓ. பன்னீர்செல்வத்துடன் சீல் வைப்பதற்கான உத்தரவு நகலை அளித்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

அலுவலகத்தைவிட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறிய ஓபிஎஸ் சிறிதுநேரம் தர்னாவுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் பிரதான வாயிலுக்கும் கோட்டாட்சியர் வைத்தார். மேலும், அதிமுக அலுவலகம் அருகே சட்டவிரோதமாக கூடினால், 145 தடை உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுக்கு பிறகே சீல் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT