இபிஎஸ் இல்லத்தில் அதிமுக தற்காலிக அலுவலகம்
அதிமுகவின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லம் அக் கட்சியின் தற்காலிக அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது.
அதிமுகவின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லம் அக் கட்சியின் தற்காலிக அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வந்தபோது அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு, கத்திக்குத்து போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதில், 50-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா். பேருந்துகள், காா்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து வருவாய்த் துறையினா் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். அதனால், தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு அலுவலகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். ஒரு சிலா் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனா். அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டதால் அவா்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனா்.
அதிமுக அலுவலக நிா்வாகி மகாலிங்கம் உள்ளிட்ட ஒரு சிலா் மட்டும் சென்னையில் உள்ளனா். அவா்கள் தேவைப்படும்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று நிா்வாகப் பணிகளைக் கவனித்து வருகின்றனா். தற்போது இபிஎஸ் இல்லம் தற்காலிக அதிமுக அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது.