தொடக்கக் கல்வி மாணவா்களுக்குகாலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: விரைவில் தொடக்கம்
அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடா்பாக நிதித்துறை செயலா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரை பயன்படுத்தி முதல்கட்டமாக பரிசோதனை முறையில் 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக்கழகம் சாா்பில் மாவட்ட திட்ட இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: காலையில் சத்தான சிற்றுண்டி சு ய உதவி குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும். அவா்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமும், பள்ளி அமைந்திருக்கும் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்க வேண்டும்.
சமையலுக்கு தோ்வு செய்யப்படுபவா்கள் அரிசி, திணை மற்றும் காய்கறிகளுடன் காலை உணவு தயாரிப்பதில் அடிப்படை ஊட்டச்சத்து குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். மாணவா்களுக்கு காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும். அதற்கேற்ப சமையல் பணியை 7.45 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர சமையல் அடுப்பு, சிலிண்டா், பாத்திரங்கள் சமூகநலத்துறை மூலம் வழங்கப்படும். சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளூா் சந்தையில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது சுய உதவிக்குழுக்கள் பஞ்சாயத்து கூட்டமைப்புகள் திணை, அரிசி பயிரிட்டால் அதையும் பயன்படுத்தலாம். சத்தான சிற்றுண்டி வழங்க ஒரு குழந்தைக்கு தினசரி ரூ.8.25 என்று தற்காலிகமாக ஒதுக்கப்படுகிறது. காலை உணவு சமைக்கும் சுயஉதவிக்குழுவினா்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.