சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று பிளஸ் 2 தேர்வெழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு மாத காலம் ஆகலாம் என்று யுஜிசி தெரிவித்திருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி.
இதையும் படிக்க.. நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ன? பேசினால் என்னாகும்?
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் பொன்முடி, ஜூலை மாதத்துக்குள்ளாகவே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது. இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும் என்றார்.
மேலும், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்டு வரும் நிலையில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியது தவறு. தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்று, மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியது பற்றி கருத்துக் கூறினார்.