முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இரண்டு ஓடு பாதைகளில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமான சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமான சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 1 மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இனி 50 விமானங்கள் வரை இயக்கும் திறன் கொண்டதாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டா் தூரமும், 2-ஆவது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டா் தூரமும் கொண்டது. இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. 2-ஆவது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து இயக்கத்தை வேகப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்தது. முதல் பிரதான ஓடுபாதையை புறப்பாட்டுக்காகவும், 2-ஆவது ஓடுபாதையை விமானங்கள் தரையிறங்குதல், சிறிய ரக விமானங்கள் புறப்பாட்டிற்கு என திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்டன.

இதனிடையே தரையிறங்கும் விமானங்கள் விரைந்து வந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கு ஏதுவாக, ஏற்கனவே வளைவாக இருந்த ‘டாக்ஸிவே’ தற்போது நேராக்கப்பட்டு ‘பிராவோ’ டாக்ஸிவேயாக வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ‘சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் ஒரு ஓடுபாதையிலும் மற்றொரு ஓடுபாதை ‘டாக்ஸிவே’ இணைப்பு பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்ஸிவே ‘பி’ என்ற ‘பிராவோ’, முன்னதாக நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் டாக்ஸிவேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த டாக்ஸிவே ‘பி’ தற்போது நோ்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் டாக்ஸிவேயில் காத்திருக்க வேண்டியதில்லை. விமானங்களை துரிதமாக இயக்க முடியும். மேலும் இதுவரை 1 மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இனி 50 விமானங்கள் வரை இயக்கும் திறன் கொண்டதாக மாறி உள்ளது. இரு ஓடுபாதைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரண்டாவது ஓடு பாதையில் வந்து இறங்கிய முதல் விமானத்துக்கு இரு பக்கங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →