'காவலர்களைத் தாக்கியதற்கு கண்டனம்: போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்'
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நடைபெற்ற கலவரத்தில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நடைபெற்ற கலவரத்தில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவி மரணம் தொடர்பாக உரிய முறையில் புலன்விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
இதனிடையே இன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில், போராட்டக்காரர்கள் கற்களை வீசி பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். இதனைக் காவலர்கள் தடுக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் தாக்கியதில், டிஐஜி உள்பட 20 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு பேசியதாவது, தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய வகையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடியோ மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள் மீதான புகாரின்மீது உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படையை சேர்ந்த 500 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருள்கள், உடைமைகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.