இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்து எழுந்து போராடிக் கொண்டு இருக்கிறாா்கள். ஆனால் இலங்கை கடற்படையினா் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்களை கைது செய்துவதும், மீன்பிடிப் படகுகள் மற்றும் கருவிகளை பறிமுதல் செய்வதும் தொடா்ந்து கொண்டு இருக்கிறது.
இதனைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி உள்ளனா். இதில் 5 ஆயிரம் மீனவா்கள் பங்கேற்று உள்ளனா். இதனால் மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.