மணப்பாறையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அண்ணா சிலை திடலில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ.சின்னச்சாமி, ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணப்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், லால்குடி, திருவரம்பூர் ஆகிய தொகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போதி கண்டன உரையாற்றிய பா.குமார், 'திமுக தலைவாராக ஸ்டாலின் பாஜகவை எதிர்க்கலாம், ஆனால், தமிழக முதல்வராக எதிர்க்கின்ற காரணத்தினால்தான் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. ஸ்டாலின் தனது வறட்டு கௌரவத்திற்காக மத்திய அரசை எதிர்த்து தமிழக மக்களை துன்பப்பட வைக்கிறார்.
543 எம்பிகளில் அதிகமாக உள்ள தரப்பில்தான் பிரதமர் தேர்தெடுக்கப்படுகிறார். அதேபோல் பொதுக்குழு அதிகம் உள்ள தரப்பில் இருந்து எடப்பாடி தேர்வு செய்யப்படுகிறார். இது செல்லாது என்றால் 234 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யும் ஸ்டாலின் உள்ள சட்டப்பேரவையும் செல்லாது, மோடி பிரதமாராக இருப்பதும் செல்லாது. இது இரண்டும் செல்லாது என்றால் இதுவும் செல்லாது. ஸ்டாலினுக்கு கரோனா வந்த அடுத்தநாள் பன்னீர்செல்வத்திற்கு கரோனா வருகிறது. இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். இருவரும் மாறி மாறி நலமுடன் வாழ்த்து சொல்லிக்கொள்கிறார்கள்' எனப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.