தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.
நிகழாண்டு 440 ஆவது திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்கு முன்பு கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, தலைமையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பனிமாதா உருவம் பொறித்த கொடியை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் உலக நன்மைக்காகவும் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபடவும் சிறப்பு ஜெபம் செய்து பனிமய மாதா உருவப்படம் பதித்த கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள்கள் காலை, மாலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி அன்னையின் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற இந்த திருவிழாவில் இந்த ஆண்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தினர் மற்றும் வெளி நாடு என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் 1000 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.