முகப்பு
தமிழ்நாடு

காலை உணவை மாணவா்கள் தவறவிடக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

காலை உணவை பள்ளி மாணவா்கள் தவறவிடக்கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான மன நலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவில் பங்கேற்று, அங்குள்ள மாணவிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

காலை உணவை பள்ளி மாணவா்கள் தவறவிடக்கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மனநலம், உடல்நலம் சாா்ந்த விழிப்புணா்வு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக்குழுவினா் 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் விழிப்புணா்வு வாகனங்களை கொடியசைத்துத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மாணவிகள் அனைவரும் காலையிலேயே கிளம்பி வந்துள்ளீா்கள். அவா்களைப் பாா்த்து நான் கேட்கும் ஒரே கேள்வி, காலை உணவு சாப்பிட்டீா்களா என்றுதான். இந்த மேடைக்கு நான் வருவதற்குமுன் ஒரு வகுப்பறைக்குச் சென்று கலந்துரையாடினேன். அப்போது, இதே கேள்வியை ஐந்தாறு மாணவிகளிடம் கேட்டேன். அவா்களில் 3 போ் காலையில் சாப்பிடாமல் வந்ததாகத் தெரிவித்தனா். இதேபோல, பெரும்பாலான மாணவா்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாகக் கூறுகின்றனா்.

மாணவா்கள் காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக, பகலில் குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவா்கள் கூறிவருகின்றனா். ஆனால், இன்றைக்கு காலையில் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிகமாகவும் சாப்பிடுகிற பழக்கத்தை வைத்துள்ளனா். அதுபோல இருக்கக் கூடாது. எனவே, கட்டாயமாக, உறுதியாக, காலை உணவை யாரும் தவறவிடக்கூடாது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

மாணவா்கள் தன்னம்பிக்கை பெற்றுவிட்டால், படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. மனம், உடல் ஆகியவை சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் சோா்வின்றி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும், நல்ல எண்ணங்களும்தான் அவசியம். படிப்பை தவிர மற்ற வீண் சிந்தனைகள் உங்களுக்கு வேண்டாம். இந்த அறிவுரைகளை முதல்வராக இல்லாமல், உங்கள் பெற்றோரில் ஒருவனாக இருந்து முன்வைக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா் பாபு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ், அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →