முகப்பு
தமிழ்நாடு

4 லட்சம் பேர் விண்ணப்பம்: அரசுக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்! ஏன்?

தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

Updated On : 29 ஜூலை 2022, 9:31 am IST
பகிர்:

தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அரசுக் கல்லூரிகளில் சிறந்த உள்கட்டமைப்பு தேவை என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் (டிசிஇ) தரவுகளின்படி, இந்த ஆண்டு தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 4,07,045 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

ஆனால், விண்ணப்பப் பதிவு முடிவுடையும் புதன்கிழமைக்குள் விண்ணப்பித்த 4 லட்சம் பேரில் 2,98,056 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாகவும் கட்டணம் செலுத்தியவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

இதுவே, கடந்த ஆண்டு 2.29 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கும் என்றும் கூறினர்.

'கரோனா தொற்றுநோயால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் அரசுக் கல்லூரிகளில் குறைந்த கட்டணம் என்பதாலும் இந்த ஆண்டு அதிக விண்ணப்பம் வந்திருக்கலாம். 

மேலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருவதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தேவையை உயர்த்தியுள்ளது' என்றனர். 

தமிழ்நாடு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத் தலைவர் வீரமணி கூறுகையில், 'இந்த தொற்றுநோய்க் காலம், அரசுக் கல்லூரிகளின் மதிப்பை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. குறைந்த கட்டணமும், நல்ல ஆசிரியர்களும் இருப்பதால் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். கல்லூரிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்து முன்னுரிமை அடிப்படையில் அதிக வகுப்பறைகளை கட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

'கல்லூரிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்' என்கிறார் அரசுக் கல்லூரியின் பேராசிரியர் பி. வைஜெயந்தி.

ஒவ்வொரு ஆண்டும் அரசுக் கல்லூரிகளில் 20-25 சதவீதம் இடங்கள் அதிகரித்து வருவதாகவும் தேவைப்பட்டால் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.