முகப்பு
தமிழ்நாடு

'பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல்': ஆர்.பி.உதயகுமார்

பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல் என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

மதுரை: பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல் என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே யூனியன் கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் தொடர் போட்டியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் துவக்கி வைத்தார். இப்போட்டியில் பங்குபெறும் வீரர்களுடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் சிறிது நேரம் டென்னிஸ் விளையாடிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தது. நீதிமன்ற தீர்ப்பால் ஆன்லைன் ரம்மி தொடர்கிறது. ஆன்லைன் ரம்மியால் 23 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சுமாக பேசுகிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

திமுக என்றுமே ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகவே பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கத்தை கருத வேண்டும்.

பிரதமரிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம்.

என் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்ட புகார் அரசியல் காழ்ப்புணர்வுடன் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார். மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.