கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள அருள்மிகு கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தெரிவித்தார்.
தேனி மாவட்டம், கம்பம் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவில்களில் இந்துசமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இணை ஆணையர் பாரதி பேசியதாவது: கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கம்பராயப்பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில்களில் ஆய்வு செய்தபோது பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதில், கும்பாபிஷேகம், திருமணமண்டபம், சஷ்டி மண்டபம் மேற்கூரை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தோரண வாயிலை மாற்றி ராஜகோபுரம் கட்டி கொள்ளுதல் உள்பட 14 கோரிக்கைகளுக்கு மண்டல கமிட்டி அனுமதியளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநில கமிட்டி நிதி ஒதுக்கியவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், செயல் அலுவலர் சுரேஷ், கம்பம் நகர திமுக பொறுப்பாளர்கள் வக்கீல் துரை நெப்போலியன், சூர்யா செல்வக்குமார் மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர்.