நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
மேலூர் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக மேலூர் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம் திறப்பு மற்றும் திருப்பத்தூர் அருகே காரையூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்குவழி சாலை அருகே உள்ள, அஞ்சப்பர் உணவகத்தில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.
முன்னதாக மேலூர் பகுதிக்கு வருகை தந்த, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், அ.வல்லாளப்பட்டி பேரூர் கழகம் சார்பில் அதன் சேர்மன் குமரன் தலைமையிலும், மேலூர் தெற்குதெரு நான்கு வழிச்சாலையில், மேலூர் நகர் கழகம் சார்பில் மேலூர் நகர்மன்ற தலைவர் பொறியாளர் முகமது யாசின் தலைமையிலும், கொட்டாம்பட்டி ஒன்றியம் சார்பில் தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜராஜன் தலைமையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், திமுக கொடியேந்தி, பட்டாசு வெடித்து, மாலை மற்றும் சால்வை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உடன் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் உடன் வருகை தந்தனர்.
இதனைத்தொடர்ந்து இரவு தனியார் உணவக விடுதியில் ஓய்வெடுக்கும் முதல்வர். காலை 09.00 மணியளவில், சாலை மார்க்கமாக. அட்டப்பட்டி, பூதமங்களம், கொடுக்கம்பட்டி வழியாக கோட்டைவேங்கைபட்டி சென்று அங்கு கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தினை திறந்து வைக்க உள்ளார்.