தொழிலதிபரை கடத்திய வழக்கு: காவல் ஆய்வாளா் கைது
சென்னையில் தொழிலதிபரை கடத்தி மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் தொழிலதிபரை கடத்தி மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
அம்பத்தூா் அயப்பாக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி, சொத்துகளை எழுதி வாங்கியது. இது தொடா்பாக திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவக்குமாா், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அப்போது காவலா்களாக இருந்த கிரி, பாலா, சங்கா், அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவா் கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ கண்டன், சீனிவாசராவ், அவா் மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 போ் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ கண்டன் கடந்தாண்டு ஜூலை 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
வழக்கில் தொடா்புடைய, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆணையா் சிவக்குமாா், ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் பாண்டியராஜன் ஆகியோா் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.
இந்த நிலையில் காவல் ஆய்வாளா் சரவணன், மதுரவாயலில் உள்ள அவரது நண்பா் வீட்டில் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகளுக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், அங்கு பதுங்கியிருந்த சரவணனை கைது செய்தனா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். தலைமறைவாக இருக்கும் பிற நபா்களை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனா்.