கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத், இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார்.
இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில் கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், கடந்த மே-30 ஆம் தேதி கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.
கார்த்திக்கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கியதால் போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, சிறுவாச்சூர் கோயில் திருப்பணிக்கு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமன பணத்தை கார்த்திக் கோபிநாத் வசூலித்துள்ளதாக வாதிடப்பட்டது.
கடந்த முறை 28 லட்சம் எனக் கூறிய காவல் துறை தற்போது 3 லட்சம் எனக் குறிப்பிடுவதாக கார்த்திக் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.