திருச்சி: திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மா. பிரதீப் குமார் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்றார்.
ஐஏஎஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சு. சிவராசு, வணிக வரிகள் துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநராக இருந்த மா. பிரதீப் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதைடுத்து திருச்சி மாவட்டத்தின் 145-ஆவது ஆட்சியராக மா. பிரதீப் குமார் வியாழக்கிழமை காலை பதவியேற்றார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், திருச்சி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான் வாலஸ் (1801-1804) பதவி வகித்தார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, வி.வி. சுப்பிரமணியம் ஆட்சியராக இருந்தார். தற்போது, 144-ஆவது ஆட்சியராக பிரதீப்குமார் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அகதிகள் முகாமில் ‘லவ் ஜிஹாத்’ ? : எச்சரிக்கும் உளவுத்துறை
முன்னதாக ஆட்சியரகத்துக்கு வந்த பிரதீப்குமாரை, மாவட்ட நிலை அலுவலர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர், ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து பதவியேற்பதற்கான ஆணையில் கையொப்பமிட்டார் பிரதீப்குமார்.
ஆட்சியரகத்தில் உள்ள பிரிவுகளில் பணியாற்றும் முதல்நிலை அலுவலர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர், அனைத்து துறைகளின் மாவட்ட நிலையிலான அலுவலர்கள், ஆட்சியரகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்கள், பணியாளர்கள் புதியதாக பதவியேற்ற ஆட்சியருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.