மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள இவ்வேளையில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமைகொள்கிறது.
தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் இன்று (ஜூன் 19) தொடக்கி வைத்தார். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டி, தமிழகத்தில் ஒருங்கிணைப்படுவது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக இப்போது தொடங்கப்பட்டிருக்கும் ஜோதி ஓட்டமானது, இனி வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தொடா்ந்து நடைபெற இருக்கிறது.