முகப்பு
தமிழ்நாடு

'மண் காப்போம்': தமிழ்நாடு திரும்பிய ஜக்கி வாசுதேவுக்கு வரவேற்பு

இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM
சத்குரு ஜக்கி வாசுதேவ்
பகிர்:

'மண் காப்போம்' இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு: தமிழ்நாடு திரும்பிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வரவேற்பு

சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களின் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 74 நாடுகளில் ஆதரவை பெற்று தமிழ்நாடு திரும்பிய  சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சத்தியமங்கலத்தில் இன்று (ஜூன் 21) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Advertisement

பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொது மக்களும் சத்குருவை வரவேற்றனர்.

அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற  ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின  நிகழ்ச்சியிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார்.

பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு ஆதியோகியை வந்து அடைந்தார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு நடைபெறவுள்ள நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை தொடங்கிய சத்குரு, கடும் குளிரையும், கன மழையையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடர்ந்தார். சுட்டெரிக்கும் பாலைவன வெயிலிலும், புழுதி புயலுக்கு இடையில் சத்குரு தனது சவாலான பயணத்தை இடைவிடாமல் மேற்கொண்டார். அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அரங்கே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் நிகழ்ச்சியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் மரியம் பின்ட் முகமது பங்கேற்று தங்களுடைய அரசின் முழு ஆதரவை தெரிவித்தார். இதேபோல், இஸ்லாமிய முஸ்லீம் லீக் அமைப்பும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டேயேவும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29-ம் தேதி பாரத நாட்டிற்கு வந்த சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டிப் பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார்.

குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிற துறை அமைச்சர்களையும் சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments