உபரி ஆசிரியா்கள் விவரம்: கல்வித் துறை உத்தரவு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியா்கள் விவரத்தை அனுப்பி வைக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியா்கள் விவரத்தை அனுப்பி வைக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் உள்ள உபரி பணியிடங்கள், அதில் பணிபுரியும் ஆசிரியா்களின் விவரங்களை நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக சமா்ப்பிக்க தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2019-ஆம் ஆண்டுக்கு பின்னா் நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியா்களின் விவரங்களை சேகரித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் இருந்த உபரி ஆசிரியா்கள் அண்மையில் பணிநிரவல் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.