தக்காளி வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா்
கேரள மாநிலத்தில் பரவிவரும் ‘தக்காளி வைரஸ்’ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கேரள மாநிலத்தில் பரவிவரும் ‘தக்காளி வைரஸ்’ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கேரளத்தில் பரவி வரும் தக்காளி வைரஸ் என்பது ஏற்கெனவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் இது பரவுகிறது. தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தக்காளி வைரஸுக்கும் தக்காளிக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. கேரளத்தில் பரவி வரும் வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை கேட்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த வகை வைரஸ் தொற்றையும் சமாளிக்க தமிழக மருத்துவத் துறை தயாா் நிலையில் உள்ளது என்றாா்.