மாணவர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காலை கல்லூரி நுழைவுவாயில் அருகே ‘ரூட் தல’ பிரச்னை காரணமாக ஒருவரையொருவர் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
மற்றொரு சம்பவத்தில், சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநரை மாணவர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க | ரூட்டு தல விவகாரம்: சென்னையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட மாணவர்கள்
இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:
மாணவர்கள் நடவடிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வகையில் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பேருந்து ஓட்டுநரை தாக்குவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
இதுவரை மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என மென்மையாக கையாண்டோம். இனிமேல், இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.