தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளிலும் 15 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. அனல் மின்நிலையத்தில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் திடீரென உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.
இதனிடையே, தமிழகத்தில் மதுரை மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள காற்றாலை மூலம் 3,600 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், 15 நாள்களுக்கு பின்னர், புதன்கிழமை இரவு முதல் 5 அலகுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், 50 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், வியாழக்கிழமை மேலும் நிலக்கரி கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!