மதுரையில் இரண்டாம் நாளாகத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மைப் பணி நடைபெறாததால் 1,500 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவுப் பணியாளர்கள் சுமார் 3000-க்கும் அதிகமானோர் மதுரை மேலவாசல் குடியிருப்புப் பகுதியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக மாநகராட்சியின் தூய்மைப் பணிகளான கழிவு நீர் அகற்றம், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவை நடைபெறாமல் இருப்பதால் 1,500 டன்களுக்கு மேல் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.
வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்புக் குழு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் என நேற்று வரையில் 4 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தற்போது இரண்டாம் நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.